Thursday 1 October 2015

புது முயற்சியில் புதுக்கோட்டை நகராட்சி
பூமி எதிர்நோக்கி இருக்கும் மிகப்பெரிய அபாயத்திலிருந்து மரங்களால் மட்டுமே காப்பாற்ற முடியும். கவிக்கோ அப்துல்ரகுமானின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘மரங்கள் இந்த மண்ணின் வரங்கள்’ . மரங்களின்றி வாழ்வு ஏது?ஆளுக்கொரு மரம் வளர்த்தாலே போதும் இந்தப் பூமியைக் காப்பாற்றி விடமுடியும். மகத்துவமிக்க மரங்களின் அவசியம் உணர்ந்து தமிழக அரசின் ஏற்பாட்டில் புதுகை நகராட்சி ஒரு நல்ல காரியத்தில் களமிறங்கி இருக்கிறது.
மரக்கன்றுகளை வளர்த்து பொதுமக்களுக்கு மிகக்குறைந்த விலையில் விற்பதற்காக புதுக்கோட்டை புல்பண்ணையில் 10 சென்ட் அளவில் நர்சரி பண்ணையை உருவாக்கி வருகிறது. மாநில அளவில் கொண்டு செல்லப்படும் இத்திட்டத்திற்கான மாதிரிக்களமாக புதுக்கோட்டை நகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இங்கு தேக்கு,நாவல்,வேம்பு போன்ற 7 வகையான அடர் நிழல் தரும் மரக்கன்றுகளை இந்தப் பண்ணைகளில் வளர்த்து விற்பனை செய்ய உள்ளனர். நகராட்சியிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கவைத்து அதிலிருந்து உருவாக்கப்படும் இயற்கை உரத்தால் இந்தக் கன்றுகள் வளர்க்கப்பட்டுவருகின்றன. பொதுமக்களின் தேவை கருதி மரக்கன்றுகளின் ரகங்கள் இன்னும் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
ஒரு மரக்கன்றின் விலை ரூ. 3/ (மூன்று) மட்டுமே என்று சொல்லி இருக்கிறார் புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் ராஜசேகர். இந்த மாத ( செப்டம்பர்) இறுதியிலிருந்து விற்பனை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 5,750 மரக்கன்றுகள் இந்தப் பண்ணையில் இருக்கிறதாம். இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து இதர மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கப்படுமாம்.
இது தொடர்பான நல்ல செய்தியை வெளியிட்ட (14-092015) THE HINDU – ஆங்கில நாளிதழுக்கு. ( திருச்சி பதிப்பு ) நன்றி.

No comments:

Post a Comment