Tuesday 29 September 2015

முகவரியற்ற முகங்கள் எதற்கு?

முகவரியற்ற முகங்கள் எதற்கு?

ஆடை குறைப்பாய்
ஆங்கிலம் மட்டும் ஏற்பாய்
தமிழ் பெயரும்  தாய்தந்தையும்
தகுதிக்குறைவென்பாய்...

ஆணும் பெண்ணும்
சரிநிகர் என்பதில்
சற்றும் குறைவில்லை
அது ..
குடித்தலுக்கும்
புகைத்தலுக்கும்
மட்டுமே இல்லை மக்களே ...

கண்ணியம் மீறா  பெண்ணியமும்
வன்முறை தீண்டா  வாலிபமும்
பெற்றோருக்கு
நீ செய்யும்  பெரும் மரியாதை!

விஞ்ஞானத்தோடு விளையாடு
செவ்வாய்க் கிரகத்துக்கு சிறகடி
கணினியோடு கை குலுக்கு
அரசியலில் பங்கு கொள்
அதிகாரம் கைப்பற்று
அனைத்திலும் முன்னே செல்
இன்னும்  இன்னும்  மேலே போ ...

ஆனால்
 ஒன்று மட்டும் புரிந்து கொள் ...
வேர்களை வெட்டி எறிந்து விட்டு
பூக்களை நுகராதே !

பண்பாட்டின் மறுபெயர்
பழமை என்று விளக்கம்  தரலாம்
உன் டிஜிட்டல் உலகம்....

மொழியும் இனமும்
உன் முகவரி தோழா  !

முகவரியற்ற முகங்கள் எதற்கு?
முத்துகளற்ற சிப்பிகள் எதற்கு?
                 
                             - பழ.அசோக்குமார் , புதுகை

(வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் 2015 க்காவே 'முகவரியற்ற முகங்கள் எதற்கு?' எனும்  தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே என உறுதி அளிக்கிறேன்.


இதற்கு முன் எங்கும் வெளியிடப்படவில்லை! இது  என்னுடைய முழு  கற்பனை ஆக்கமே! போட்டி முடிவுகள் வெளிவரும் வரை வேறெதிலும் வெளியிடமாட்டேன் என்று உறுதி கூறுகின்றேன்! போட்டியின் அனைத்து விதிமுறைகளுக்கும் கட்டுப்படுகிறேன். 


- பழ.அசோக்குமார் , புதுக்கோட்டை.)